top of page

ஸ்ரீரங்கம் திருவரங்கபெருமாள் அரையர் - வரலாறு மற்றும் அவரின் மகத்துவம் (ஸ்ரீ ராமனுஜரின் ஆச்சார்யர்)

History of Sri Vaishnava Acharya Srirangam Thiruvarangaperumal Araiyar: ராமாநுஜரின் ஐந்து ஆசார்யர்களுள் ஒருவரான திருவரங்கப் பெருமாள் அரையர் ராமாநுஜரை விட சுமார் 40 நாட்கள் இளையவர்.இவர் ஸ்ரீ ஆளவந்தாரின் பூர்வாசிரம ஜேஷ்டகுமாரர். திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை முத்தமிழிலும் இயல் (வியாக்யானம்),இசை(தாளத்துடன் இசைப்பது). நாடகம் (அபிநயம்) -சொல்ல/பாட/காட்ட வல்லவர்.ஆழ்வார்கள் அருளிச்செயலில் இவருக்கு இருந்த ஊற்றத்தால் 'ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர்'என்று போற்றப் பட்டார்.நித்யசூரிகளில் ஒருவரான சங்குகர்ணரின் அம்சமாக அவதரித்தார்.

Aacharya of Ramanuja
Thiruvaranga Perumal Araiayar

இவர் எந்தப்பிரபந்தப் பாசுரத்துக்கும் எந்த நேரத்திலும் இசை/அபிநயம் செய்யவல்லவர்.அழகிய மணவாளப் பெருமாள் அர்ச்சகர் மேல் ஆவேசித்தும்,

அப்போதிருந்த ஆசார்ய மஹாபுருஷர்களும் எந்தசமயத்திலும்,

எந்தப் பாசுரத்துக்கும் அபிநயம் கேட்பார்கள். திருவரங்க பெருமாள் அரையர் - தனியன் "ஸ்ரீராமமிச்ர பதபங்கஜ சஞ்சரீகம்,

ஸ்ரீயாமுனார்ய வரபுத்ர குணாட்யம்,

ஸ்ரீரங்கராஜ கருணா பரிணாம தத்தம்,

ஸ்ரீபாஷ்யகார சரணம் வர ரங்க மீடே!!" பொருள்: "ஸ்ரீராமமிச்ரர் என்னும் மணக்கால் நம்பியின்(இவருடைய ஆசார்யர்) திருவடித் தாமரைகளில் வண்டாக இருப்பவரும்,ஸ்ரீயாமுநாசார்யருடைய சிறந்த புத்திரரும்,குணத்தில் மிக்கவரும்,ஸ்ரீரங்கராஐப் பெருமாளின் கருணையினாலே பெறப்பெற்றவரும் ஸ்ரீ பாஷ்யகாரரைச் சிஷ்யராகக் கொண்டவருமான திருவரங்கப் பெருமாள் அரையரை வணங்குகிறேன்.

ஸ்ரீவைஷ்ணவ சமயத்தின் மஹா ஆசார்யர்,ஸ்ரீ ஆளவந்தார் தமக்குப் பிறகு,ஸ்ரீவைஷ்ணவத்தின் தலைமைப் பீடத்தை ராமாநுஜர் ஏற்க வேண்டும் என்று,ராமாநுஜரை 'ஆம் முதல்வன்'என்று அடையாளம் காட்டி விட்டுச் சென்றார்.அவ்வாறாக காஞ்சியில் இருந்த ராமாநுஜரை,ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பும்படி,அரங்கர் வரதருக்குத் திருமுகம் (ஓலைச்சுவடிக் கடிதம்) அனுப்பினார்.ஆனால் வரதர் ராமாநுஜரை அனுப்பவில்லை.பதில் திருமுகமும் வரவில்லை.ஸ்ரீரங்கத்தில் இருந்த ஆசார்யபுருஷர்கள் ஒன்றுகூடி ,அரங்கரின் தூதுவராக திருவரங்கப் பெருமாள் அரையரை வரதரிடம் அனுப்பலாம் என்று ஆலோசித்தனர்.அரையர் இயல்,இசை,நாடகவல்லுனர்.வரதராஜர் கான/கலைப்பிரியர்.எனவே அரையர் மிக அழகாக வரதர் முன் பாடியாடி,அவரை மகிழ்வித்தால்,அதற்குப் பரிசாக ராமாநுஜரைக் கேட்டுப் பெற்று விடலாம் என்பது அவர்கள்எண்ணம்.இதற்கு அரங்கரிடம் வேண்டி அவர் நியமனத்தைப் பெற்றனர் அரங்கர் நியமனப்படி அரையர் காஞ்சிக்குப் புறப்பட்டார்.


ஆசார்யர் அரையரிடம்,அண்ணல் ராமாநுஜர் கற்றவை

ஸ்ரீ ஆளவந்தார் தம் தலையாய சீடர்கள் ஐவரிடம்,ராமாநுஜருக்கு வெவ்வேறு சாஸ்திர அர்த்தங்களைக் கற்றுத் தருமாறு நியமித்துச் சென்றார்.

"ஒரு ராஜா ஸ்வகுமாரார்த்தமாகப் பல மந்திரிகளிடத்தே நிதிகளை வைத்துத் தன் குமாரன் ப்ரபுத்தனானவாறே,கொடுக்கச் சொல்லிப் போமாபோலே,

ஆளவந்தாரும் இவர்களிடத்தில், ஒவ்வொரு அர்த்தவிஸேஷத்தை உபதேசித்து வைக்கையாலே,ஆளவந்தார் ஸ்ரீபாதத்திலே சேவித்து அவ்வர்த்தஙகளைப் பெறாத இழவு தீர இவர்கள் பக்கல் (ராமாநுஜர்) அவ்வர்த்தங்களைப் பெற்று இழவு தீர்த்தாரித்தனை"(ஆறாயிரப்படி குருபரம்பரை).அவ்வாறாக திருவரங்கப் பெருமாள் அரையரிடம்,திருவாய்மொழி தவிர மற்ற திவ்யப் பிரபந்தங்களின் அர்த்தங்களையும்,சரமோபாயநிஷ்டை என்னும் ஆசார்ய பக்தியையும் போதிக்குமாறு பணித்தார்.

பெரியதிருமொழி,இயற்பா போன்ற திவ்யப் பிரபந்தங்களின் செறிவான அர்த்த விசேஷங்களை,உடையவர் அரையரிடம் கேட்டறிந்தார்.குறிப்பாகக் 'கண்ணிநுன் சிறுத்தாம்பின்' உன்னதமான அரும்பெரும் பொருளை அழகாக உரைத்தார் அரையர்."வாய்த்த திருமந்திரத்தின் மத்திமாபதம் போல்,சீர்த்தமதுரகவி செய்கலையை" என்று உடையவரின் மறு அவதாரமான, மணவாளமாமுனிகள் பாடியது போல்.


பெரிய கோவிலில் பெருங் கொண்டாட்டம்:

அரையர் அழைத்து வந்த ராமாநுஜருக்கு ஸ்ரீரங்கம் எல்லையான வடதிருக்காவேரியிலிருந்து அலங்கார வரவேற்பு அளிக்க அரங்கர் கட்டளையிட்டார். தாமும், ஸ்ரீரங்கநாச்சியாரும் தவிர பெரிய கோவிலிலிருந்த அனைவரையும் சேனைமுதலியார் தலைமையில் அனுப்பி வைத்தார்.அடையவளைந்தான்/சித்திரை/உத்திர வீதிகள் வழியாக ஸ்ரீரங்கமே திரண்டு வர பூலோக வைகுண்டத்துக்குள் தம் பொன்னடி சாத்தினார் யுகமுனிவர்.அழகிய மணவாளர் தாமே, தம் ஆஸ்தானத்தை விட்டு,காயத்ரி மண்டப வாசல் வரை திருக்கைத்தலத்தில் எழுந்தருளி எதிராஜரை எதிர்கொண்டு அழைத்து உபய விபூதிகளுக்கு எல்லாம்"உடையவர்"ஆக்கினார்.

யார் தருவார் இந்த வரவேற்பு?

யாருக்குக் கிடைக்கும் இந்த இந்த தெய்வ மரியாதை??

பெரிய பெருமாள், ஸ்ரீரங்கநாதர் மட்டுமே தர முடியும் !

எம்பெருமானார், ராமாநுஜர் மட்டுமே பெற முடியும் !!.

85 views0 comments

コメント


bottom of page